திருக்கோவலூர்

ஆழ்வார்களால் மங்களாசாசனம் பண்ணப்பட்ட முதல் திவ்யதேசம் திருக்கோவலூர்

Thursday, April 19, 2012

திருக்கோவலூர்

உத்தமனான சர்வேஸ்வரன் பின்னானார் வணங்கும் சோதியாக, தேங்கிய மடுக்கள் போன்று, தானுகந்து அர்ச்சாவதரமாக எழுந்தருளி இருக்கும் திருத்தலங்கள் நம் பாரத தேசத்தில் பல உள்ளன. உயர்வற உயர்நலம் உடையவனான எம்பெருமானால் மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் ஆழ்வார்கள் என்று வழங்கப் பெறுவர். அவ்வாழ்வார்களும் எம்பெருமானின் பரம கிருபையினால் தன்னுடைய ஈரச் சொற்களால் எம்பெருமானை மங்களாசாசனம் பண்ணி அருளினர். இப்படி ஆழ்வார்களால் மங்களாசாசனம் பண்ணப்பட்ட திருத்தலங்கள் திவ்யதேசம் என்று கொண்டாடப்பட்டு வருகிறது என்பது எல்லோரும் அறிந்ததே.

ஆழ்வார்களின் ஈரச் சொற்களே நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகும். ஆழ்வார்களால் பாடல் பெற்ற தலங்கள் நூற்றெட்டு ஆகும். பஞ்ச கிருஷ்ணாரண்ய க்ஷேத்ரங்களுள் ஒன்றானதும், நடு நாட்டு திருப்பதிகளுள் ஒன்றானதுமான திருக்கோவலூர் திவ்யதேசத்தில் தான் முதன்முதலில் இந்த திராவிடவேதமான நாலாயிர திவ்யப்பிரபந்தம் மங்களாசாசனம் பண்ணப்பட்டது. பூங்கோவலூரும் முதல் திவ்யதேசம் ஆனது.

இந்த திருத்தலம் பரம்பரையாக ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் மடத்தில் பட்டத்தில் எழுந்தருளி இருந்த ஜீயர் சுவாமிகள் நிர்வகித்து வந்ததோடு, இன்றும் வர்த்தமான ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் சுவாமி நியமனத்துடனே நிர்வாகங்கள், கைங்கர்யங்கள் மற்றும் உத்சவங்கள் எல்லாம் நடைபெற்று வருகிறது.

1 comment:

R. Narasimhan said...

Best wishes. start writing vedantham. -- Narasimhan